முக கவசம் அணிவது சுவாச மண்டலத்தின் செயற்பாட்டை மேம்படுத்துகிறது என அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணிவதால் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். அதே நேரத்தில் முக கவசம் அணியும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அது ஆவிபிடிப்பதுபோல் செயல்பட்டு, சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியும் ஊக்குவிக்கப்படுகிறது என ஆய்வின் முதன்மை ஆசிரியர் அட்ரியன் பாக்ஸ் தெரிவித்துள்ளார்.
காய்ச்சலின் தீவிரத்தைத் தணிக்க உடலில் ஈரப்பதத்தை அதிகரிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. இதேபோன்ற ஒரு பொறிமுறையின் மூலம் கொரோனா பரவலின் தீவிரத்தையும் குறைக்க முடியும்.
முககவசம் அணிவதன் மூலம் நுரையீரலில் ஈரப்பதம் அதிகரிக்கப்படுகிறது. இது வைரஸூக்கு எதிராக போராடும் செயல்திறனை அதிகரிக்கிறது எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
N95 முககவசம், அறுவை சிகிச்சை முககவசம், பருத்தி-பொலிஸ்டர் முககவசம் மற்றும் கனமான பருத்தி முககவசம் என்பவற்றைப் பயன்படுத்தி இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான முக கவசங்களை அணிந்துகொண்டு தன்னார்வலர்கள் சுவாசித்தபோது உருவான ஈரப்பதத்தின் அளவை ஆய்வாளர்கள் அளவிட்டனர்.
முக கவசங்களை அணிந்திருந்தவர்களின் சுவாசப் பாதை அதிக ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இது நுரையிரலில் ஈரப்பதத்தை அதிகரித்து சுவாச மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்த மேம்பாடு தொற்று நோயை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.